Skip to content
Skip to content
Menu
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
  • Home
  • About us
    • Article of Association
  • Membership
  • News
    • Press Release
  • Useful Links
  • TN Day 2024 Conference
  • FTS கவிதைப் போட்டி 2025
  • 2025 Events
  • FTS Kalai Thiruvizha 2025 Event Schedule
  • FTS Events – At a glance
  • My FTS Turns 10
  • FTS Team 2025-26
    • Previous Board & Executive Committee (2015-2024)
    • FTS Committee Role & Responsibility.
      • FTS Annual General Meeting (AGM)
      • FTS Election Guidelines and Process
    • Previous Board & Executive Committee (2015-2024)
  • Call for Sponsors
  • Call for Volunteers
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V

FTS கவிதைப் போட்டி 2025

FTS கவிதைப் போட்டி 2025

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் 10வது ஆண்டு

கவிதைப் போட்டி முடிவுகள்

அன்பான தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ,

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் 10வது ஆண்டு கவிதைப் போட்டி முடிவுகள்

நடுவர் :   பாவலர் திரு. அறிவுமதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள்

கவிதை எண்.1 :
தலைப்பு : என் வாழ்க்கை 
எழுதியவர் : துரையா அமீர் (Duraiya Ameer,  Frankfurt Tamil Sangam e.V. )

பதின்ம அகவையில் அறியாமலே...
மணமுடித்து முடிவடைந்து 
தவப்புதல்வனின் தவிப்பினால், 
மன முறிந்து மணம் முடித்து 
வலம் வருகின்ற சீமாட்டியின் சீதனங்கள்.

கவிதை எண்.2 : 
தலைப்பு : காதல் கவிதை
எழுதியவர் : யுவராஜ் (Yuvaraj Venkatesan, Berlin Tamil Sangam e.V. )

இறைவா,
வாழ்க்கைக்கான சிறந்த
புத்தகத்தை தா வாசிப்பதற்கு
என்றேன் ...
அப்பொழுது தான் ,
நீ என்
வாழ்விற்கு வந்தாய்.
உன்னுடன் பழகிய
ஒவ்வொரு சந்தோச தருணங்களையும்
நினைத்து
ஒரு நாட்குறிப்பில்
எழுத தொடங்கினேன் .
பக்கங்கள் நிறைவடைந்த பின்னர் தான்
உணர்ந்தேன்,
அந்த வாழ்க்கைக்கான புத்தகமே
நீ என்று.

கவிதை எண்.3 :
தலைப்பு :  காற்றின் காதல்
எழுதியவர் : ராம்குமார் ராமமூர்த்தி (Ramkumar Ramamoorthy, Stuttgart Tamil Sangam e.V. )

காற்று என் கன்னம் தொட்டது,
அது என்னை மெல்ல அழைத்தது.
நான் திரும்பி பார்க்கும் முன்,
அது போய்விட்டது!
"ஏன் வந்தாய்?" கேட்டேன்,
காற்று மௌனமாக சிரித்தது.
"நான் காதலிக்க வந்தேன்,
ஆனால் என்னை பிடிக்க முடியாது!" என சொல்லி சென்றது..

கவிதை எண்.4 : 
தலைப்பு :  பெண்மை 
எழுதியவர் : பிரவின் கொளஞ்சி  (Pravin Raj Kolanji, Dresden Tamil Sangam e.V.)

பேதையிலோ துள்ளி ஓடும்
புள்ளிப் பிணை அவள்
பெதும்பை எட்ட ஆடும்
மாரி நேர மயிலவள்
அச்சம் அறியா மங்கை
கங்கு வீசும் தழல்
மடந்தை வரும் வெட்கம்
மயக்கும் மதிச் சாரல்
அறிவை அறியும் மோகம்
காமன் ஏங்கும் கூடல்
தெரிவைத் தெரியும் தாய்மை
பார் தேடும் தேடல்
பேரிளம்பெண் கொண்ட மனம்
ஆழம் விளங்கா கடல்
முடியக்கூடும் பருவம்
புரியாப் பெண்மை நீளும்

கவிதை எண்.5   
தலைப்பு :  கனவா இருக்குற வீடு!
எழுதியவர் : பிரியதர்ஷினி முரளிதரன் ( Priyadharshini Muralidharan, Frankfurt Tamil Sangam e.V.)

கனவா இருக்குற வீடு
வெறும் நினைவா இருக்குற வீடு
ஓடி திரிஞ்ச வீடு
நினைவு இன்னும் ஓடாம  இருக்குற வீடு
தினமும் பாடி திரிஞ்ச வீடு
இப்போ   வெறும் பாட்டுல இருக்குற வீடு
மருதாணி கிளை நன்கு ஏறி இருந்த வீடு
எட்டா கனியா இருக்குற வீடு
கோடையில் புங்கை பூக்கள் உதிர்த்த வீடு
மனதில் பசுமரத்தாணி போல பதிந்த வீடு
அக்கா  தங்கை உடன் வாழ்ந்த வீடு
அகத்தில் என்றும் உயிரோட்டத்துடன் இருக்கும் வீடு
அப்பா அம்மாவின் அன்பு கிடைத்த வீடு
அப்பப்பா  என்றும் எண்ணி மாலாத வீடு!!

கவிதை எண்.6
தலைப்பு :  பயணம்
எழுதியவர் :  கேசவன் பார்த்தசாரதி (Kesavan Parthasarathy, Frankfurt Tamil Sangam e.V.)

பாதை தாண்டி பயணித்தோம்
எதை தேடிய பயணம் இது?
அன்பென்றோம் அடிமையானோம்!
அமைதி என்றோம் அழிந்தே போனோம்!!
இனி எதை வெல்ல இந்த பயணம்?
பூக்களை தோட்டாவால் சுட்டெரித்தோம்,
புதைந்த அந்த புன்னகையை
எங்கே நாம் கருத்தரிப்போம்???
வா அருகே!!!
பூ உலகை புதியதாய் வரைந்திடுவோம்!!!


கவிதை எண்.7
தலைப்பு :  கோபம்
எழுதியவர் : மீனா மதிவாணன் (Meena Mathivanan, Düsseldorf Tamil Sangam e.V. )

பிறை நிலா விளிம்பிலும்
பிழை பார்ப்பாய்
அரையில் அரையும்
தரையில் தவிடும்
திரையின் மறைவும்
நரைத்த முடியும்
நிறையும் குடமும்
சிறைக் கம்பிகளும்
மறையும் மின்னலும்
பறையின் மொழியும் கூட
குற்றம் தான் உனக்கு
சினம் கொள்ளும் குணமும்
குறை கூறும் சொல்லும்
மனம் கொல்லும் வில்லும்
முறை இல்லா வார்த்தையும் கூட
குற்றமென்பதை என்றறிவாய் ?

கவிதை எண்.8 
தலைப்பு :  நெடுஞ்சாலை
எழுதியவர் : வைத்தீஸ்வரன் (Vaitheeswaran Rajaram, Frankfurt Tamil Sangam e.V.)
 
வேகம் கொண்ட மின்னல்களும்
மேகம் தாண்டி தவழ்ந்தோட,
கற்காரை தரை தந்த கார்வண்ண கர்ணன் நீ .
விரைவோர்க்கு வரையறை இல்லை.
உறைவோற்க்கோ ஓய்வறை மட்டும் உண்டு .
தொய்வுகள்கொண்ட உன் பிரிவுகளில் தாக்கம் இல்லை
ஓய்வுகள் தாரா உன் இணைப்புகளில் ஊக்கம் உண்டு .
நாவைக்கடந்து நாடியில் கலந்த கசப்பென
வேகம் குறைக்கும் உன் முகங்கள்
சேவை கருதிய தேவை தானோ ?
நெரிசல் உனக்கு விருந்தினரோ ?
பரிசளித்து பகிர்ந்துண்ண வருவதினால்
விரிசல்கள் உனக்கு விரோதிகளோ ?
பரிகசித்து பல்லிளிக்க பதுங்குவதால் ?
சீரிய வேகமும் கூரிய கவனமும் இலக்கினை அடையும் .
போரிடும் வாழ்க்கைக்கு நீ கூறிடும் தத்துவம் இதுவே (என் இனிய ஜெர்மனியின் நெடுஞசாலையே )!! (Autobahn))

கவிதை எண்.9  (மூன்றாவது இடம்)
தலைப்பு :  ஆனந்த உட்பயணம்  
எழுதியவர் : தனலட்சுமி ராம்குமார் (Dhanalakshmi Ramkumar, Frankfurt Tamil Sangam e.V. )


அகரத்தில் வியாபித்து அகரத்தில் ஒடுங்கும்
ஆனந்த உட்பயண அனுபவம்
இருளிலேகிடந்து இச்சை வினையால் இறங்கி
ஈசனருளால் ஆறாறுடன்இப்புவனியில் அவதரித்தோம்
உருவாக்கிய உலகில் உழன்று ஊனுடன்
ஊடுருவி போகத்தை அனுபவித்தோம்
எழுந்தகணம்முதல் நான் எனதென்ற செருக்கு
ஏறி மாயவலையில் அகப்பட்டோம்
ஐந்நூறுமுழுமதி கடந்தவயதில் புறசலிப்பாலும் அகவிருப்பாலும்
ஐந்தெழுத்தைஓதி ஐம்புலன்களும் அடங்கியது
ஒடுங்கியமனத்தால் உமைஅம்மையருளால் அன்புபொங்கி உள்ளம்
ஓங்கி ஓங்காரத்தால்எம்மை ஆட்கொண்டாய்
ஒளடதமாக எக்காலத்திலும் நிலைப்பது மெய்ப்பொருளேயென
ஒளவையின் அகவல்வாயிலாக அறியஉணர்த்தினாய்
அஃது உணர்ந்த மெய்ப்பொருளுடன் நிட்டைக்கூடுவதுன்றோ ?
அஃதுகூடும்வரை தொடருமிந்தஉட்பயணம்நின் அருளால்
கவிதை எண்.10
தலைப்பு :  தெரிவு 
எழுதியவர் :  தாரிணி ஆனந்தி ஶ்ரீனிவாசன் (Tharini Ananthi Srinivasan, Dresden Tamil Sangam e.V.)

அதுவோ ? இல்லை ...
இதுவோ ? இல்லை ...
எதுவோ ? என்று
வினாக்கள் ஏராளம் விரவிக்கிடக்க ,
எண்ணிலடங்கா எண்ணங்கள் தான்
கண்ணை மறைக்கிறதே ,
தேவையற்ற அறிவுரையும் குவிய ,
பதிலின்றி நாமும் தவிக்க ,
தலைமறையும் யோசனையும் தான் தலையெடுக்கிறதே ,
அதுதான் முடியுமோ ? அல்லவோ !
சரி ! முடிவு கிடைத்தாயிற்று !
இனி விளைவு யாதோ ?
விமர்சங்கங்கள் எத்தனையோ ?
கேள்விகளும் முடியா !
தெரிவுகளும் முடியா !
நம் தினசரி வாழ்வில் பல சூழ்நிலைகளில் வெவ்வேறு தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம். 
அத்தகைய நேரங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடும் சிந்தனைகளே இக்கவி !


கவிதை எண்.11   (முதல்  இடம்)
தலைப்பு :  கலியுகத்துப்பரணி 
எழுதியவர் : கலையரசி முருகேசன் (Kalaiarasi Murugesan, Munich Tamil Sangam e.V.)

திசை அறியா பறவையொன்று
போர் விமான விசையில்  அலறியதில் 
சிதறிய  எச்சத்தின்  மிச்சமாய் மண் சேர்ந்ததொரு  வித்து .
விடியல் காண்பதில்லை புதையாத விதை
போர்க்களத்தில் விடியல் எங்கே விசும்பியது  அது
குண்டடி  பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்
மேல் விழ
மண்ணில் புதைந்தது விதை .
போருக்காக போர் செய்தவனோ
சோறுக்காக போர் செய்தவனோ
அறியோம் நாம் ; அவனுதிரம் உதிர
உயிரானது  விதை , உடலானது சதை 
„என்னானானோ“ பதறியது  சுற்றம் 
எண்ணாயிருந்தான் அவன்  அப்போது
இன்னும் எத்தனை எண்களோ?
தகப்பனின் கல்லறை மேல் அரியணை
தனியான தனயனின் குறை தீர்க்க
முரணுக்கு அறம் இல்லை. ..அரணும்  இல்லையா?
மண்ணுரிமைக்கு  மனித உயிரா?
கொல்லப்படுவது  மனிதம்  எனில்
வெல்வதெப்படி  வீரமாகும்?
எளியோனை சிதைக்கும் வலியோனே
போர் வலியென்று அறிவாயா நீ
கொன்று வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்
ஆவிகளுக்கு அரசனாக எண்ணமா?
கணக்கிலடங்கா சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள் 
களத்தில் இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்
நடந்தவை குற்றமா இல்லையா என்று.
வெள்ளையான மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா  என்ன?
விழித்தெழு ; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.
ஜெயம்கொண்டாரே பயம் கொள்ளும் கொடுமைகள்
இனி நடவாமல் இருக்கட்டும்.
போர் துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்
தரணியது  புது  பரணி  பாடும்  உனக்கு
„எய்தவன் அறியா அம்பானோம் நீயும் நானும்“
மலரான வித்து ஆறுதலாய் சேதிசொன்னது  செத்தவனுக்கு  .
இறப்பிற்கு அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா
தான் வந்த திசை தவறானதென்று, வித்திட்ட பறவை விம்மியது


கவிதை எண்.12.
தலைப்பு :  அரை மனமே
எழுதியவர் : சுபகா கண்ணன்  (Subhaga Kannan, Dresden Tamil Sangam e.V. )

அரை மதியைய் போல்,
உனது அரை மனதை மட்டும் காண்பித்தல் ஏன்?
களங்கமில்லா நிலவெங்கே?
சலனமில்லா மனமெங்கே?
நண்பகலிலோ கதிரொளியில் கரைந்து என்னை ரசிப்பாய்,
நள்ளிரவிலோ நட்சத்திரத்திரங்களின் இடையே நின்று சிரிப்பாய்!
இருப்பினும் எதிர்நோக்கினேன்,
இன்றாவது வானை நீ நிறைமதியாய் அலங்கரிப்பாயோ என்று!


கவிதை எண்.13  (இரண்டாவது   இடம்)  
தலைப்பு :  மறு(மறுக்கும்) சுழற்சி  
எழுதியவர் :  இந்துமதி குமரேசன் (Indhumathi Kumaresan, Hamburg Tamil Sangam e.V.)

அய்யோ ...
இப்பிறப்பும் பெண்தானா ?
என பழையவள் அலுக்க...
மறுபிறப்பும் புவிதானா ?
என புதியவள் சலிக்க ...
பிரசவ அறையில் மறுசுழற்சி
குருதி சுழல ''அவள் (அலறல்)கள்''
இம்மாதமும் விடாய் என சமூகங்கள் விலக்க...
மறுமாதமும் விடாமல் அண்டங்கள் சுரக்க ...
கருவறையில் மறுசுழற்சி
குருதி சுழல ''அவள்(நாள்)கள்''
இச்சோதனையும் சிதைந்தவளுக்குத்தானா?
என கத்தி கிழிக்க ...
மறுசோதனையும் சதைக்குத்தானா ?
என கத்தாமல் கிடக்க...
பிரேத அறையில் மறுசுழற்சி
குருதி சுழல ''அவள்(கீறல்)கள்''
புவி சுழல சுழலும்
அவள் ''மறு(மறுக்கும்)சுழற்சி''

கவிதை எண்.14
தலைப்பு :  எங்கள் வெளிநாட்டு வாழ்க்கை
எழுதியவர் :  சுபாஷினி பாலமுருகன் (Subhashini Balamurugan, Frankfurt Tamil Sangam e.V.)
                                                             
தூரத்து நிலவின் ஒளியில்
புதுமையான உலகம் காண்கிறோம்
எங்கள் நிழல்களில் பழைய கதைகள்
அழிந்தாலும் மறக்க முடியாத நினைவுகள்
இங்கே காற்றின் மொழி வேறு
ஆனால் எங்கள் இதய சப்தம் ஒன்று தான்
எங்கே சென்றாலும், நாம் எங்கு இருந்தாலும்
எங்களின் வீடு எதிலும் காணலாம்
அன்பின் உணர்வு எங்கள் பாதைகளை வழிகாட்ட
பரிசுத்தமான நாட்கள் வீசுகின்றது
எங்கள் தமிழ் உள்ளங்களுக்கு
இந்த பிராங்பேர்ட் தமிழ் சங்கத்திலே!!!

கவிதை எண்.15
தலைப்பு :  காதலே காதலே !!!
எழுதியவர் :  ஶ்ரீ  (Shriram Ragothaman, ERH Tamil Sangam e.V.)

சாய்க்க வைக்கும் காதல் – தாயின் காதல்!
தாங்கி பிடிக்கும் காதல் – தந்தையின் காதல்!
எதையும் நம்பி விடும் காதல் – குழந்தையின் காதல்!
தைரியத்தை அளிக்கும் காதல் – நண்பனின் காதல்!
நம்பிக்கையை கொடுக்கும் காதல் – இணையின் காதல்!
காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல;
அது ஒரு அழகான உணர்வு.
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்,
காதல் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல;
அது நம் வாழ்வின் உயிர் நாடி…
உயிர் நாடி நம்மை விட்டு பிரிந்தாலும்,
நாம் பிறர் மீது கொண்ட காதல் என்றுமே வாழும்!
காதல்” என்ற ஒரு வார்த்தையில் பல உறவுகள்,
பல வழிவகைகள், பல உணர்வுகள் அடங்கியிருக்கின்றன!
காதல் நமக்கு எதையும் செய்யும் ஆற்றலை தருகிறது!
அதனால் அனைவரும் காதல் செய்வோம்!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!!


கவிதை எண்.16
தலைப்பு :  ஹைக்கூ : கோலம் 
எழுதியவர் :  ஸ்ரீதேவி பாண்டியன் (Sridevi Pandian, Frankfurt Tamil Sangam e.V.)

அழுதாய் மழையில்
மடிந்தாய் தரையில்
யாரைக்குறைகூற
இட்டவரையா மிதித்தவரையா

கவிதை எண்.17 
தலைப்பு :   என் முதல் காதல் கணிதம்
எழுதியவர் : மீனாட்சி பரமசிவன் ( Meenakshi Paramasivan, Frankfurt Tamil Sangam e.V.)

வாங்கிய முதல் முத்தத்தை
எந்த எழுத்துக்களிலும் பதித்து விட முடியாமல்
மூச்சு திணற மயங்கியவளின்
கண்களைத் திறந்தே வை என்றான்
அந்த ராமன்,
தெனாலிராமனும் இல்லை
முத்துராமனும் இல்லை,
என் முதல் காதலன் இராமானுசன்
 –என் முதல் காதல் கணிதம்.


கவிதை எண்.18 
தலைப்பு துணிச்சலே துணை
எழுதியவர் : நந்தா (Nandakumar Thirugnanam, Munich Tamil Sangam e.V.)
 
கருவறையின் இருட்டில்
கவலையின்றி
படுத்து உறங்கும்
பச்சிளம் தளிரே !
வெளிச்ச உலகைக்காண - நீ
வெளியே வருகையில்
துணிச்சலையும் கொஞ்சம்
துணைக்கு கொண்டு வா !
ஆர்ப்பரிக்கும்
அவசர உலகத்துக்கு -உன்
மழலைப் பேச்சையும்
மாசற்ற சிரிப்பையும்
அருகிலிருந்து ரசிக்கப்
பொழுதுகள் இருக்கப் போவதில்லை
பால் மணம் மாறும் முன்
பள்ளியில் சேர்த்திடுவர் !
பேசத்தொடங்கும் முன்
படிக்க வைக்க முனைந்த்திடுவர் !
கொஞ்சம் வளர்ந்த பின் - உன்
நெஞ்சம் நினைப்பதை
மகிழ்ந்துபடித்திட
மறந்திடும் இந்த உலகம்
எல்லோரும் ஓடு பாதையில்
உன்னையும் ஓடவிடும் !
வாழ்க்கைக்கல்வி மறந்து
கற்பதே வாழ்க்கையாகும் !
கற்றபின் நிற்பது மறந்து
காசைத்தேடி ஓட விடும் !
கைபேசியில் தொடங்கும் -உன்
கருவிகளுடனான பொழுதுகள்
கணக்கின்றி கழிந்திடும்
நிஜ உறவுகளுடனான பிணைப்பு
நிச்சயமாய் தேய்ந்திடும் !
முன்னனோர் சொன்ன
பாரம்பரியம் அனைத்தும்
மூட்டையில் சுருங்கிடும் !
நடப்பது அனைத்தும் அறிந்தும்
நாளை பார்க்கலாம் என
நடையை கட்டும்
அவசர உலகத்தில் ...
அமைதியைத்தேடி
அடியெடுத்து வைக்கும்
ஆருயிரே ...
துணிச்சலையும் கொஞ்சம்
துணைக்கு கொண்டு வா !


கவிதை எண்.19 
தலைப்பு என் மகன் என் உறவு
எழுதியவர் :  சிந்து மோகன்குமார் (Sindhu Mohankumar, Frankfurt Tamil Sangam e.V.)

செம்பட்டை முடி,காட்டுக் கிளியின் சிவந்த இறகிலோ!!!
உன் கருவிழி , அந்த நீல வானில் உள்ள நிலவை போலவோ !!!
நீ பேசி  செல்லும் மழலைப்பேச்சு , எனக்கான மருந்தோ !!!
உன் குரல் , அந்த பச்சை கிளியின் குரலை போலவோ !!!
அந்தி வளர்பிறை நகமோ?
இளசூரிய விடியல் முகமோ ?
தங்கமே தேகமோ ?
பவளமோ ? வைரமோ ?
தூய வெண்பனி அகமோ ?
சங்காய் மான் போன்ற கால்கள்,
நீ குதிக்கும் போது வரும் சந்தேகமே !
கடவுள் அளித்த 3 கிலோ தங்கமே ,
இப்போது 18 கிலோ வளர்ந்து நிற்கிறாய் !!
என்றும் எனக்கு உன் நிழல் தருவாயோ ?


கவிதை எண்.20  (மூன்றாவது இடம்)
தலைப்பு : திண்ணையும் ! தென்னையும் ! 
எழுதியவர் : பிரதிபா சம்பத்குமார் ( Prathiba Sampathkumar, Munich Tamil Sangam e.V.)

வண்ணக் குவளைகள் குறைவில்லாமல் நிறைந்த குலத்தெதிரே
குலம் குடிகொண்டிருந்த அருமை திண்ணை வீடு!
மழைத்தூறலில் மனைக்கு முன்னே நின்ற மகிழமரம் மணிமணியாய்
உதிர்த்த மகிழம்பூவின் வாசம்தான் மண் வாசனையை மிஞ்சிவிட்டதோ!
இருக்கட்டும் ! பொறுமையும் பெருமையும் மன்னைத் தானே சேரும்!
ஆகட்டும் ! மூன்று தலைமுறைக்கும் முன்னவர்கள் முறையாய் வாழ்ந்ததன் சான்று இந்த வீட்டையே சாரும்!
முன்னிருக்கும் ஆளோடியில் நெல் ஆவடிக்கிடக்கும் இல்லையென்றால் பிள்ளைகளின் ஆரவார ஆட்டம் நடக்கும்
இடையே இழையோடும் இரேழியின் இடத்தோரமாக பத்து பந்திக்கு பத்தும் நெல்லோட ஒரு பத்தாயம் .
பக்கமாய் குவிந்து கிடக்கும் குடலைக் கெடுக்காத கொடாப்பில் பழுக்கும் பழங்கள்!
உத்திரங்கள் தாங்கும் ஓட்டுக்கூரையின் கீழ் பத்திரப்படுத்தப்பட்ட பாசங்கள்
கூடிய கூடத்தின் தூண்கள் தூண்டும் நீத்தார் நினைவுகளை!
அப்புறம் அப்பளம் உருட்டவும் அம்மி அரைக்கவும் அணை வாய் அமைந்த தாழ்வாரங்கள் !
கொல்லைப்புறத்தில் காலை கதிர்களை கீற்றுக்கிடையே கடத்திய தென்னையும்
மாலை நேரத்தில் உட்கார்ந்து உரையாடி உறவாடிய திண்ணையும்
நித்தம் தந்த நிம்மதியில் மனம் நிறைந்து இருந்திருப்பர்றன்றோ!

   

கவிதை எண்.21  (மூன்றாவது இடம்)
தலைப்பு :  பாலைவனத்தில் ஒரு பறவை  
எழுதியவர் :  ஹரிகுமார் பத்மராஜா (Harikumar Padmaraja, Frankfurt Tamil Sangam e.V.)

அன்னையின் அரவணைப்பில் குமரியில் வளர்ந்தேன்,
கனவுகளை கட்டிக்கொண்டு  முக்கடல் கடந்து புறப்பட்டேன்.
உயரம் நோக்கி பறக்க முயன்றேன்,
ஆனால் ஊஞ்சலாடும் கண்கள் பின்தங்கின.
மண்ணின் மணமும், வீட்டின் வெண்மையும்,
புது நாட்டு குளிரில் பிழைப்பதற்கு போராடின.
நாட்கள் மாற, சில இனிமையும், சில கடினமும்,
ஆனால் இதயம் தமிழகத்திலேயே உறங்கின.
வீட்டு வாசலில் மழைபோல் விழுந்த பிரிவின் கண்ணீர்,
இந்த வெளிநாட்டில் வறண்ட மணலாகப் படிந்தன.
கை பிடித்து வழிநடத்தியவை, இன்று WhatsApp உரையாடலாகிப் போயின.
அப்பாவின் அன்பும், அம்மாவின் சோறும்,
Video call-ல் காணலாம், ஆனால் தொட முடியவில்லை.
புதிய உலகம், புதிய வாய்ப்புகள்,
ஆனால் மனம் பழைய நினைவுகளுக்குள் பயணிக்கின்றன.
தூரம் எதுவாக இருந்தாலும்,
அன்பு கடந்து வந்து மனதை நனைக்கும்.
இன்று வறண்ட மனம், ஆனால் ஒரு நாள்,
மீண்டும் வீட்டின் மழையில் நனைந்திட வேண்டும்.
மனம் ஓயாது பறக்கிறது,
ஒரு நாள் அந்த மழையை மீண்டும் சந்திக்கும்வரை.

கவிதை எண்.22
தலைப்பு :  தமிழ்
எழுதியவர் : ஆங்கேலீனா  அமலோற்பவராஜ் (Angelene amalorpavaraj, Frankfurt Tamil Sangam e.V.)

என் உயிரின் இசையே
என் வாழ்வின் நடுகோளே
என்னை தாங்கி கண்டிக்கும் ஆசானே
உன் அறிவு என்னை வழிகாட்டும்
என் தவறு சரிபோக்கும்
செரிவுடை மொழியே
ஆழம் கொண்ட மொழியே
என் தாய்மொழி தமிழ் உன்னை போற்றுதமே!

கவிதை எண்.23
தலைப்பு :  சமயம்(காலம்)
எழுதியவர் :  ஜெனிபர்  அனிதா  பிரான்சிஸ்  (Jennifer Anita Francis, Frankfurt Tamil Sangam e.V.)

நேற்று
நான் நாம்
இன்று
நீ எதிர்
நாளை
விடை தருமா!

கவிதை எண்.24
தலைப்பு :   நிலை
எழுதியவர் : மதுர நாகம் (Nagarajan Muthuraman Thoppey, Hamburg Tamil Sangam e.V.)

காதலை அறிய பாரசீகம் காட்டியது ஏழு நிலை -என்
காதலின் முறிவில் நான் மானசீகமா கண்டதும் ஏழு நிலை
முறிவை மெய்யென ஏற்க மறுக்கும் -அது
பொய்க்கனவென நினைக்கத்துடிக்கும் -நிலை மறுப்பு
உடல் முழுவதும் அமிலம் சுரக்கும் -அது
உடன் இருப்போரை சுட்டு எரிக்கும் -நிலை வெறுப்பு
பேரிருள் அகம் தமிழ் குடி கொள்ளும் -அவ்விருள்
அனைத்தையும் புறம் தள்ளும் , அன்பதனைப் புதைக்கும் -நிலை துக்கம். 
சந்தித்த நாட்களை சிந்தித்துக்கொள்ளும் -அவை
மீண்டும் வந்திடாதா என நிந்தனை கொள்ளும் -நிலை ஏக்கம் .
நிரஹாசனம் புரியும்,முறிவின் பொருள் பிரிவென மெய்ப்படும்
இனி அவள் என் இனியவளே அல்லள் என உணரும் -நிலை ஏற்பு.
வலி வேறு வதை வேறென்ன இனம் கொள்ளும் ,
வதை தரும் ரணம் தனில் இருந்து மனம் விடுதலை கொள்ளும் -நிலை மீட்சி.
அனுபவம் ஆசானாகும் ,அன்பைப் புதைக்கலாகாது -அதை
விதைக்கலாகும் என தெளிவுறும் , மனம் துளிர்க்கும் -நிலை தெளிவு.


கவிதை எண்.25
தலைப்பு :  உன்னை தேடி 
எழுதியவர் : ஸ்ரீ அபிநயா (Shree Abinayaa C.U, Frankfurt Tamil Sangam e.V.)

கடந்த 30 வருடத்தில் ஒரு முறை கூட உன்னை
ஆசையாய் பார்த்தது இல்லையோ ! என்னவோ !!
தை மாதத்தில் கூட உன்னை
திட்டியதால் தானோ என்னவோ !!
மாசி மாதத்தில் கூட உன்னை ராசிக்காமல்
ஏசி போட்டதால்தானோ என்னவோ !!!
பங்குனி வெயில் பல்லை காட்டுது என்று
ஏளனம் பேசியதால் தானோ என்னவோ !!!
இன்று நீ என் கண்ணில்படவிரும்பவில்லை போலும் !!!
இப்படிக்கு வெளிநாட்டில் உன்
கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும்


கவிதை எண்.26
தலைப்பு :  உறவாய் தமிழர் உலகெங்கும்
எழுதியவர் : பார்த்தசாரதி  சண்முகசுந்தரம் (Parthasarathy Shanmugasundharam, ERH Tamil Sangam e.V.)

தேசம் விட்டு கிளம்பயில,
தேகத்தில பதபதப்பு !
சொத்து சுகம் சேத்திடுவ,
சொந்தத்துக்கு என்ன செய்வ ?
சங்கமுன்னு பேர வச்சு,
சனமெல்லாம் கூடி நிக்க,
சொந்தமிங்க இல்லையேன்ன,
சோகமெல்லாம் பறந்து போச்சு!
புத்தாண்டு பொங்கல்ன்னு,
கொண்டாட்டம் நிதமிருக்கும்,
துன்பத்துக்கும் தோளிருக்கும்,
துரிதமா சனம் வந்து நிக்கும்.
விதேசம் போறமேன்னு,
விரக்தி தேவையில்ல.
எதுக்கு  பயப்படனும்,
எங்கும் தமிழர் இருக்கையில!
        

கவிதை எண்.27
தலைப்பு :  வெளிநாட்டு தமிழ் கல்வி
எழுதியவர் : சுஜீதா திருகொண்டா கிருஷ்ணமூர்த்தி (Sujitha Thirukonda Krishnamoorthy, ERH Tamil Sangam e.V.)

எர்லாங்கென் ஹெர்சோ தமிழ் சங்கம்
வானில் மின்னும் நக்ஷத்திரம்
அவற்றுள் நவ ரத்தினங்கள்
ரத்தினங்களுள் நம்பிக்கை நக்ஷத்திரமாய் எம் கல்வி
கற்றுக்கு குடுப்பது எம் பள்ளி
வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்



கவிதை எண்.28
தலைப்பு :  புது வசந்தம்
எழுதியவர் : அம்ரித் வெங்கட் ( Amrith Venkat Kesavamoorthi, Dresden Tamil Sangam e.V.)

நீண்ட மழை முடிய, புது வசந்தம் பிறக்க,
புது இழையின் அடியில் தஞ்சம் புகுந்த சிற்றெறும்பு
இழையில் எஞ்சிய நீர் குமிழி சிறுக சிறுக பருக.
தேனீக்களுக்கு தேன் நீர் விடுதியாய் பலவண்ணப் பூக்கள்
அருந்திய அமிழ்துக்கு சுமக்க மலர்களும் மகரந்த மடல் அனுப்ப.
நேற்று சூறையாடிய புயல் காற்று
இன்று மெல்ல இழையின் தழை கோத
இவ்வேளையில் நடந்து செல்லும் நானும் அவ்விளந்தென்றலோ?


கவிதை எண்.29
தலைப்பு :  தாத்தா
எழுதியவர் : ஆனந்த ஜோதி (Ananda Jyothi, Hamburg Tamil Sangam e.V.)

இல்லம் முழுதும் சொந்தம்
ஆனால் இவ்விழிகள் நாடுவதோ உன் மலர் முகம்
சேலை உடுத்திய பேதையிவள்
ஏனோ உனை நினைக்கயில் இன்றும் மழலையே இவள்
நான் உறங்க நீ பாடிய கதைகளோ நூறு
அதுப்போன்று எக்காப்பியமும் வடிக்கவில்லை பாரு
மொட்டை மாடியில் ஊஞ்சல் கட்டித் தந்தவன் அவன்
என் அஞ்சலுக்காக வாயிலில் காத்திருந்தவன் அவன்
கூடி நிற்கும் மக்கள் மத்தியில் பஞ்சாயத்து தலைவன் அவன்
பல கண்களுக்கு விருந்தான சுந்தரன் அவன்
சின்ன சின்ன கனவுகளையும்
வண்ண வண்ண நிகழ்வுகளாய் மாற்றிய கிழவன் அவன்
எட்டு முழத்தில் வேட்டிக் கட்டும் அய்யணார் அவன்
என் “தாத்தன்” போல் எட்டுதிசையிலும் வேரொருவன் எவன்…?


கவிதை எண்.30
தலைப்பு :  ஜெர்மனியின் என் ஒரு நாள் அலுவல்
எழுதியவர் : மதுரை மைந்தன்  (Palanikumar, Uthandaraman, Frankfurt Tamil Sangam e.V.)
 
உலகம் பிறந்தது எனக்காக !
ஓடும் ''Bahn '' களும் எனக்காக !
‘’Lufthansa -Takeoffs’’ எனக்காக !
காலைக் கதிரவன் உதித்தால்? எனக்காக !
பிரிய மறுக்கும் இதழ்களிலே- மேனி !
தழுவிய அணைக்கும் கரங்களிலே !
காதல் மிளிர்வதை நான் உணர்வேன் !
மானுடம் துளிர்ப்பது காதலிலே !
மின்னல் வேகத்தில் பறக்கும் ரதம் !
சொன்ன நேரத்தில் இலக்கு வரும் !
கடமை எனக்கங்கு காத்திருக்கும் !
கவிதையும் வழித்துணையாகவரும் !
தேவைகள் மலைபோல் இருந்தாலும்
தேகமும் மதியும் உழைக்கையிலே
மலையும் ஆலயம் ஆகிடுமே
தேவனைக்காண்பது அதில் எளிதே


கவிதை எண்.31
தலைப்பு :  யாவுமாய் நீ, நீயாய் யான் !
எழுதியவர் :  சரவணகுமார் மாரியப்பன் (SaravanaKumar Mariappan,  Stuttgart Tamil Sangam e.V.)

நானாய், நாமாய் மாறியது நீ!
கடவுள் அறியாத காதல் துகள் நீ!
சிவக்குமென் வெட்கத்தின் வெப்பம் நீ !
சாத்தானின் ஒரு பாதி கடவுள் நீ!
காதலின் கடந்தபிறவி சாபம் நீ!
இரவினைக் கெடுக்கும் கொடுங்கனவு நீ !
நரகத்தில் காதல் கையூட்டு கோரும் அரக்கன் நீ!
உன்னைப்பார்த்த அந்நாளின்
காலச்சுழலில் சிக்கிக்கொண்டேன் !
நாட்களை  உன் நினைவுகளில்  நிரப்பி கொடு
அதில் ஒரு குவளை உன் புன்னகையாயிருத்தல் நலம் !
ஒலியற்ற என் அழைப்பை  உணர்,
என் காதலை ஏற்ப்பளி, அன்பின் வசப்படு
சக மிருகமாய் உனை இரையாது உன் காதல் மோட்சம்பெற்று
நின் இறைவியாவேன்!!

 

 

 

==================================================================================

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் 10வது ஆண்டு

கவிதைப் போட்டி முடிவுகள்

 

அன்பான தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ,

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் 10வது ஆண்டு கவிதைப் போட்டி முடிவுகள் (YouTube Link )

நடுவர் :   பாவலர் திரு. அறிவுமதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள்

முதல் பரிசு:

  • கலை அரசி முருகேசன், முன்சென் தமிழ்ச் சங்கம் e.V

இரண்டாவது பரிசு:

  • இந்துமதி குமரேசன்,  ஹாம்புர்க் தமிழ்ச் சங்கம் e.V

மூன்றாவது பரிசு(கள்):

  • தனலக்ஷ்மி(பூர்ணிமா) ராம்குமார், பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
  • ஹரிகுமார் பத்மராஜா, பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
  • பிரதிபா  சம்பத்குமார், முன்சென் தமிழ்ச் சங்கம் e.V

கவிஞர் அவர்கள் கவிதைகளைப் பற்றி உரையாடி, முதல் மூன்று இடத்துக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்.

போட்டியாளர்கள், அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் பிராங்பேர்ட தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா கொண்டாட்டமான தமிழ் கவிதைப் போட்டியினை வெற்றியாக்கியதற்கு  அன்பான நன்றி மற்றும் பாராட்டுகள்.

தமிழால் இணைவோம், தமிழைப் போற்றுவோம்!

 

 

==================================================================================

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு,

FTS கவிதைப் போட்டி 2025

கவிதைப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி! அடுத்தகட்டமாக,

நடுவர்: கவிஞர் திரு. அறிவுமதி

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைப் பற்றி உரையாடி,

முதல் மூன்று இடத்துக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்.

கவிதை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்

18 மே 2025, ஞாயிறு, காலை 11.00 மணி CET 

Zoom வலைத்தள இணைப்பு: https://us02web.zoom.us/j/8645321275?pwd=ajhLdDVCNkdpRG85QmxQR2wwdHp0QT09&omn=88159384841

 

  • முதல் மூன்று இடங்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் பின்னர் வழங்கப்படும் , பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
  • தேர்வு செய்யப்பட்டஅனைத்து கவிதைகளும் பிராங்க்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் தளங்களில் வெளியிடப்படும்.

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்

 

 

 

==================================================================================

அன்பான தமிழ் உறவுகளுக்கு,

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கவிதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளோம்.

இந்த நிகழ்வில் பங்கேற்க உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

நடுவர்: கவிஞர் திரு. அறிவுமதி

கவிதை அனுப்ப கடைசி நாள் : 5 ஏப்ரல் 2025

போட்டியின் விவரங்கள் கூகிள்  https://tinyurl.com/fts2025  படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை உங்கள் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

தமிழால் இணைவோம், தமிழ் கலைகளை போற்றுவோம்!

 

 

விதிமுறைகள்:

  • ஜெர்மனியில் இயங்கி வரும் இந்திய தமிழ்ச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கலாம்
  • வயது வரம்பு இல்லை.
  • குறைந்தது 3 அதிகபட்சமாக 16 வரிகள்.
  • நீங்கள் விரும்பிய தலைப்பில் எழுதலாம்.
  • மரபு,புது,ஹைக்கூ,நவீனம் என ஏதேனும் ஒருவகையில் ஒரு கவிதை மட்டும் அனுப்பவும்.
  • .சமர்ப்பிக்கும் கவிதைகள் வேறு எங்கும் நூலிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ வெளிவந்திருக்கக்கூடாது மேலும் போட்டி முடிவுகள் வரும் வரை எங்கும் வெளியிடக்கூடாது.
  • தமிழ் யூனிகோடு வடிவில் இருக்கவேண்டும்.
  • இன, மொழி,மதம் , நாடு , அரசியல் எதிர்ப்பு சார்ந்த கவிதைகளை தவிர்க்கவும், அனுப்பினால் ஏற்கப்படமாட்டாது.
  • முதல் மூன்று இடங்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் நடுவரால் வழங்கப்படும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
  • தேர்வு செய்யப்பட்டஅனைத்து கவிதைகளும் பிராங்க்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் தளங்களில் வெளியிடப்படும்.

 

Dear Tamil Association Members,

On the occasion of Frankfurt Tamil Sangam’s 10th anniversary, we are delighted to organize a Poetry Competition to celebrate the Tamil language and literature. We warmly invite your esteemed Tamil association to participate in this event and encourage your members to take part in it.

We kindly request that you share this information with your members and inspire talented poets and enthusiasts to showcase their creativity. This will be a wonderful opportunity to celebrate our rich linguistic heritage and connect with the wider Tamil community in Germany.

Jury: Kavingar Thiru Arivumathi,  Tamil poet and lyricist

Last Date  : 5 April 2025

The details of the competition are provided in the Google Form and the attached flyer.

Your support in spreading the word and encouraging participation would be greatly appreciated.

We look forward to your positive response and enthusiastic participation.

if you have any questions, please contact :  info@frankfurttamilsangam.com

Best regards,
Frankfurt Tamil Sangam

யாதும் ஊரே யாவரும் கேளிர்

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
Frankfurt Tamil Sangam e. V.

Quick Links

  • Home
  • About us
    • Article of Association
  • Membership
  • News
    • Press Release
  • Useful Links
  • TN Day 2024 Conference
  • FTS கவிதைப் போட்டி 2025
  • 2025 Events
  • FTS Kalai Thiruvizha 2025 Event Schedule
  • FTS Events – At a glance
  • My FTS Turns 10
  • FTS Team 2025-26
    • Previous Board & Executive Committee (2015-2024)
    • FTS Committee Role & Responsibility.
      • FTS Annual General Meeting (AGM)
      • FTS Election Guidelines and Process
    • Previous Board & Executive Committee (2015-2024)
  • Call for Sponsors
  • Call for Volunteers

Contact Info:

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V.
Frankfurt Tamil Sangam e.V.


Website: www.frankfurttamilsangam.com
Email: info@frankfurttamilsangam.com
  • YouTube
  • Facebook
  • Twitter
  • Instagram

Upcoming Events

Jun 14
9:00 am - 5:00 pm

FTS Sports Day – 2025

Oct 19
12:00 pm - 7:30 pm

FTS Deepavali – 2025

View Calendar
©2025 பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V | WordPress Theme by SuperbThemes.com